Monday, April 19, 2010

நெப்போலியன்


குழந்தைகளா நெப்போலியன்
எந்த ஆண்டு பிறந்தார் ?
ஆசிரியர் கேட்டார்.
ஒராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
குழந்தைகள் சொல்லின.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு
குழந்தைகள் சொல்லின.
ஒருவருக்கும் தெரியவில்லை.

குழந்தைகளா நெப்போலியன்
என்னதான் சாதித்தார் ?
ஆசிரியர் கேட்டார்.

அவர் போரில் வெற்றி பெற்றார்
குழந்தைகள் சொல்லின.
அவர் போரில் தோல்வி அடைந்தார்
குழந்தைகள் சொல்லின
ஒருவருக்கும் தெரியவில்லை

எட்வினா சொன்னாள்
எங்கள் கசாப்புக் கடைக்காரன்
நாய் ஒன்று வைத்திருந்தான்
நெப்போலியன் என்று அதற்குப் பெயர்
அந்தக் கசாப்புக் கடைக்காரன்
அடிக்கடி அதை அடிப்பான்
அந்த நாயை பட்டினி போட்டதில்
ஒராண்டுக்கு முன்பு செத்துப் போய்விட்டது.

இப்போது எல்லாக் குழந்தைகளும்
நெப்போலியனுக்காக வருத்தப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு

எனக்குத் தெரிந்தது இரண்டு மொழிகள் ஒன்று என் தாய் மொழியான தமிழ் ; இன்னொன்று ஆங்கிலம். வடமொழி, இரஷ்யன், பிரஞ்சு, செர்மனி ஆகிய மொழிகளிலுள்ள இலக்கியங்களை ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமாகவே படிக்கிறேன். ஆக நாவலோ, சிறுகதையோ, கவிதையோ
என்னை மிகவும் ஆட்படுத்தினால் அதைத் தமிழில் மொழிபெயர்ப்பேன். ஆட்படுத்துதல் என்றால் உணர்ச்சியை கிளர்ந்தெழச் செய்தல், சிந்தனையைத் தூண்டுதல், கற்பனை செய்யும்படி செய்தல். பழக்கமானகிப் போனதை புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும்படி செய்தல் - இப்படிப் பல அர்த்தங்கள் என்பதாகும். வெறுமனே படிப்பதைக் காட்டிலும் தமிழில் மொழிபெயர்க்கும்போது நானும் படைப்பாளி ஆகும் அனுபவம் கிடைக்கிறது. சாமுவேல் பெக்கட்டின் 'கோடாவிற்காகக் காத்திருத்தல்', தாகுரின் 'சித்திரா', இமாசலப்பிரதேச சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளான 'பனிமலைப்பிரதேசத்து சிறுகதைகள்', மகேஷ் எல்குன்சுவாரின் 'பழங்காலத்துக் கல்வீடு', ரோசா லக்சம்பர்க்கின் 'சிறைக் கடிதங்கள்' இவையெல்லாம் வெளியிடப்பட்ட என் மொழிபெயர்ப்பு நூல்களாகும். தாஸ்தோவஸ்கியின் கரமோசோவ் சகோதரர்கள் எட்டாண்டுகளுக்கு முன்பு தீராநதி.காம் இல் தொடர்ந்து வெளியிடப்பட்டது. தீராநதி அச்சில் வரத் தொடங்கியவுடன் அந்த தீராநதி வலைத்தளம் நின்றுபோய்விட்டது. 1500 பக்கங்களைக் கொண்ட நாவலை நெய்வேலியில் இருந்து 'வேர்கள்' வெளியிட முயன்றது. போதிய நிதி இல்லாததால் அப்படியே கிடந்தது. சென்னையில் உள்ள புதுக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு முரளி அரூபன் வெளியிட மூன்றான்டுகளுக்கு முன்பு தட்டச்சு செய்தார். அதை மெய்ப்புப் பார்க்க கொடுத்தார். இப்பொழுதுதான் திருப்பிக் கொடுத்துள்ளேன். மஞ்சுவந்தத்தில் கையெழுத்துப் பிரதிகளாகவே இருக்கும் மொழி பெயர்ப்புகள் வெளிவரும். 'குட்டி இளவரசன்' ( எக்ஸ்கியோபேரே ) 'பறவைகள் மாநாடு', ( அத்தார் ) 'தத்துவ ஆய்வுகள்'
(விட்கன்ஸ்டைன் ) இன்னும் என்னவெல்லாம் இருக்குமோ அவைகளெல்லாம் வெளியிடப்படும். மொழிபெயர்ப்பில் சிக்கல்கள் பலவுண்டு. 'மொழிபெயர்ப்பு - என் அனுபவங்களும் சிந்தனைகளும்' என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் படித்த கட்டுரையில் அவற்றை விளக்கி இருக்கிறேன். வெளியிடப்பட்ட மொழிபெயர்புகளுக்கு சிறுகுறிப்புகள் தரப்படும். தொடக்கமாக நெப்போலியன் கவிதை வெளியிட்டிருக்கிறேன்.

0 comments: