தலையங்கம்

இந்த வலைத்தளத்தை தொடங்குவதற்கு என்ன காரணம் என்று என்னையே கேட்டுக் கொண்டேன். இப்படியொரு இணையதளத்தைத் தொடங்காவிட்டால் எவருக்கும் ஒரு இழப்பும் கிடையாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கடந்த ஐம்பதாண்டுகளாக படித்தும், எழுதியும் வருகிறேன். 'எழுத்து', 'நடை', 'கசடபதற', 'தீபம்', 'தினமணிக் கதிர்', 'வேர்கள்', 'மழை' போன்ற தமிழ்ச் சிற்றேடுகளில் எழுதியும் இருக்கிறேன். மௌனியுடன் எனக்கு இருபதாண்டு காலம் தொடர்பு உண்டு. அவர் எழுதிய சிறுகதைகள் அனைத்தையும் மௌனியின் கதைகள் என்று வெளியிட்டேன். தமிழ் எழுத்தாளர்களில் எழுத்து சி.சு.செல்லப்பாவுடன் தான் எனக்கு நெருங்கிய தொடர்பு நீண்டகாலம் இருந்தது. அவரினால்தான் ந.முத்துசாமி, சி.மணி, வெங்கட் சாமிநாதன், தருமு சிவராமு என் இலக்கிய நண்பர்கள் ஆனார்கள். இன்னொரு எழுத்தாளர் நண்பர் சமிக்க்ஷா கோவிந்தன் ஆவார். இவர் சென்னையிலேயே குடியிருந்த மலையாள எழுத்தாளர். இவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் மலையாளக்கவியான கடமிண்டு ராமகிருஷ்ணன். என் ஆளுமையை ஆழமாகப் பாதித்தவர் கோவிந்தன். மிக அற்புதமான மனிதர். சென்னை அண்ணா சாலைக்கு அருகில் - சித்திரா டாக்கீஸ் பின்புறத்தில் குடியிருந்தவர். நான் அவருடன் எத்தனையோ நாட்கள் இரவு பன்னிரண்டோ அல்லது ஒரு மணி வரையில் பேசிவிட்டு நடந்தே என் வீட்டிற்குத் திரும்புவேன். இந்த மூவருமே இயற்கை எய்திவிட்டனர். சி.சு.செல்லப்பாவினால் 'எழுத்து'வை நடத்தமுடியவில்லை, முக்கியமான காரணம் நிதி போதாமை என்றாலும், தான் கண்டுபிடித்து ஊக்கம் அளித்து எழுதியவர்கள் எல்லாம் பெரிய ஆளாக ஆகிவிட்டார்களே என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது என்பது முக்கியமான காரணம். 'எனக்கும் என் எழுத்துக்கும் வாரிசு தருமு சிவராமுதான்' என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்த சி.சு.செல்லப்பாவிற்கு 'அவன் அடங்காப்பிடாரியாகி தன்னையே எதிர்த்து விமர்சிக்கிறானே' என்ற கவலையும் ஏற்பட்டது. எழுத்து நடத்திவந்துகொண்டிருக்கையில் சி.சு.செல்லப்பாவிற்கு என்னால் முடிந்த அளவிற்கு பணம் கொடுத்து வந்தேன். 'எழுத்து' நின்றுவிட்டது. சி.சு.செ எழுத்து என்ற பிரசுரம் நடத்தினார்.அதையும் அவரால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. ஒரு நாள் சி.சு.செல்லப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது 'யார் என் புத்தகங்களை வெளியிடுவார்கள்' என்று வருத்தமாகச் சொன்னார். உங்களின் எந்தப்புத்தகத்தை முதலில் வெளியிட விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். "எனக்கு இப்போது பணம் பிரச்சனையில்லை. எனக்கு சுதந்திரப்போராட்ட வீரர் ஓய்வூதியம் மாதம் மாதம் கிடைக்கிறது. வத்தலகுண்டுவில் என் இரண்டு வீடுகளையும் பழுது பார்த்துவிட்டேன், வாடகையும் வருகிறது. என் மகன் மணியும் கனரா பாங்கில் நிறைய சம்பளம் கிடைக்கிற வேலையில் இருக்கிறான்." என்று நிறுத்திவிட்டார். உங்கள் "தமிழ் சிறுகதை பிறக்கிறது" என்ற புத்தகத்தை வெளியிடுகிறேன் என்று நான் சொன்னேன். "அப்படியா" என்று உற்சாகத்தோடு பதிலளித்தார். மேலும் சொன்னார் "என் புத்தகங்களை நீங்களே வெளியிடுங்கள் என்றார். எனக்கு ராயல்டி எதுவும் வேண்டாம். இனி எனக்கு பணக் கஷ்டம் என்பதே இல்லை" என்றார். நானும் ஒப்புக்கொண்டேன். போட்ட பணம் வந்தாலே நட்டமில்லை 'ராயல்டியும் வேண்டாம்' என்று எண்ணிக்கொண்டேன். சி.சு.செல்ப்பாவின் புத்தகங்களான 'தமிழில் சிறுகதை பிறக்கிறது', 'சீதை', 'ஜீவனாம்சம்', 'வாடிவாசல்', 'புதுக் குரல்கள்', 'மாயத் தச்சன்', 'ஊதுவத்திப் புல்', 'படைப்பியல்' ஆகியவற்றை எனது பீகாக் பதிப்பகம் மூலமாக வெளியிட்டேன். ஒவ்வொரு புத்தகத்தின் முப்பதோ அல்லது நாற்பதோ படிகள் வாங்கிக்கொண்டு போய்விடுவார். "தமிழ் சிறுகதை பிறக்கிறது" மட்டும் 100 படிகள் வாங்கிப்போனார். கடைசி மூன்று புத்தகங்கள் விற்பனையாகாமல் வீட்டில் கட்டுக்கட்டாகத் தங்கிவிட்டன. யார் கேட்டாலும் இலவசமாகக் கொடுத்துவிடுவேன் - காரணம் இடப்பிரச்சனைதான். சென்னையை விட்டு பெங்களூரில் சுப்பிரமணியுடன் இருக்கப் போய்விட்டார். சில காலம் கழித்து "சுதந்திரதாகம்" என்ற நாவலை எழுதி முடித்துவிட்டதாக எனக்கு செய்தி அனுப்பினார். இந்த நாவலை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே எழுதத் தொடங்கினார். அவருக்கு எண்பது வயது நிறையப் போகிறது என்று தெரியவந்ததும் நானும் என் மனைவியும் பெங்களூருக்குச் சென்று பார்த்தோம். சுபமங்களா ஆசிரியர் கோமல் சுவாமிநாதன் சுதந்திரதாகத்தை தான் வெளியிடுவதாக என்னிடம் சொன்னார். அவர் வேண்டுகோளின்படி சி.சு.செவிடம் இருந்து "சுதந்திரதாகம்" கையெழுத்துப்பிரதியை நான் வாங்கி கோமல் சுவாமிநாதனிடம் கொடுத்தேன். கோமல் ஆறு மாதத்திற்கு மேல் அந்தக் கையெழுத்துப்பிரதியை தன்னிடமே வைத்துக்கொண்டு "என்னால் வெளியிட முடியாது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் பக்கங்கள், நிறையச் செலவாகும்" என்று சொல்லி என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். இதை சி.சு.செவிடம், கோமல் சொன்னதையே சொல்லித் திருப்பிக் கொடுத்துவிட்டேன். சி.சு.செவிற்கு கோபம் வந்துவிட்டால் தான் என்ன பேசுகிறேன் என்பதையே மறந்துவிடுவார். கோமலைத் திட்டித் தீர்த்தார். அப்போது சுபமங்களாவில் "படைப்பியல்" என்ற தலைப்பில் இலக்கிய இஸங்களைப் பற்றி எழுதி வந்தார். 'இனி அந்தத் தொடரை எழுதமாட்டேன்' என்றார். சில மாதங்கள் கழித்து சி.சு.செ திடீரென்று என் வீட்டிற்கு வந்தார். இனி தான் பெங்களூரில் இருக்கப்போவதில்லை சென்னைக்கே திரும்பி வந்துவிட்டதாகச் சொன்னார். பேசிக்கொண்டே இருந்தவர் தான் கொண்டு வந்த பையில் இருந்து ஓரு காகிதத்துண்டை எடுத்து என்னிடம் காட்டிவிட்டுப் படித்தார்.
"என் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறீர்கள்,எனக்கு ராயல்டியாக ஒரு லட்சம் நீங்கள் கொடுக்கவேண்டும். வீட்டிற்கு மூன்று மாத வாடகை அட்வான்சாக கொடுக்கவேண்டும் என்றார்"

"நீங்கள் எந்த அடிப்படையில் கணக்குப்போட்டு ஒரு லட்சம் கேட்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. நீங்கள்தான் சொன்னீர்கள் எனக்கு ராயல்டி வேண்டாம் என்று" - நான்

"எனக்கு இப்போது பணம் வேண்டும் அவ்வளவுதான்" - சி.சு.செ

"உங்கள் புத்தகங்களுக்கு எவ்வளவு ராயல்டி சேரவேண்டும் என்பதைச் சொல்கிறேன் - ஏழு நாட்கள் அவகாசம் தாருங்கள். ஒன்றுமட்டும் நிச்சயம். ஒரு லட்சம் என்பது முடியவே முடியாது" என்று சொன்னதும், அவர் கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இரண்டுநாள் கழித்து ரூபா எட்டாயிரமோ என்னவோ கணக்கிட்டுஅவர் வீட்டுக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டேன். எப்படி எட்டாயிரம் வந்தது என்பதை இரண்டு முழு நீளக் காகிதத்தில் கணக்கு எழுதிக் கொடுத்தேன். எனக்கு அவர் அன்று நடந்துகொண்டதுதான் அதிர்ச்சி தந்தது. கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் நட்பு. !

மௌனி என்னுடன் நடந்து கொண்டதை ஒப்பிட்டுப் பார்த்தேன். ஏதோ ஒரு எண்ணத்தினால்தான் நான் எழுதியவைகளை நானே வெளியிடாமல் இருந்தேன். அப்போதே நான் எழுதிவைத்திருந்தவை ஏராளமாக இருந்தன. அந்த அனுபவத்தினால் ஏற்பட்ட கசப்பினால் நான் மொழிபெயர்த்து வைத்திருந்த சாமுவேல் பெக்கட் இன் கோடாவிற்காக காத்திருத்தல் என்ற புத்தகத்தை வெளியிட்டேன். பின்பு "சித்திரா", "பனிமலைப் பிரதேசத்துக் கதைகள்" வெளியிட்டேன். நான் எழுதிவைகளை வெளியிடுவதில் எனக்கு ஏனோ ஆர்வம் கிடையாது. வெளிவந்த என் கட்டுரைகளையும், மதிப்புரைகளையும் தொகுத்து புத்தகமாகக் கொண்டுவருவதிலும் எனக்கு அக்கறை இல்லை. சுயவிளம்பரம் என்னால் செய்யமுடியாது. ஆனால் நான் எழுதியவைகளை மற்றவர்கள் வெளியிட்டனர். "அம்மாவின் அத்தை", "உயிரியக்கம்" என்ற என் சிறுகதைத் தொகுப்புக்களை வசந்தகுமார் தமிழினி வெளியீடுகளாக அவரே விரும்பிக் கொண்டுவந்தார். "சிறைக்கடிதங்கள்", "பழங்காலத்துக் கல்வீடு" மொழிபெயர்ப்பு நாடகங்களை வைகறை வெளியிட்டார். "அழகியல் ஓர் அறிமுகம்" என்ற நூலையும், நான் தொகுத்துக் கொடுத்த நடை, இலக்கியவட்டம் தொகுப்புக்களையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டது.

எழுத்துலகில் நான் உதவி செய்தவர்களே எனக்குப் பொல்லாங்கு செய்தார்கள். அதைப்பற்றி இம்மியளவும் எனக்குக் கவலை இல்லை. ஏனென்றால் நான் இம்மியளவுகூட உதவி செய்யாதவர்கள் என்னை மதித்தார்கள். உதவி செய்தனர். வாழ்க்கையில் நன்மை செய்தவர்களை நினைத்துக்கொண்டே இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருக்கும். மகிழ்ச்சியுள்ள மனதுதான் இளமையாக இருக்கமுடியும். வாழ்க்கையில் கூட்டல்களைக் கூட்டினால்தான் பெருக்கல் கிடைக்கும். கழித்தல்களைக் கழித்துவிட வேண்டும். என் ஐம்பதாண்டு காலத்தில் நான் எழுதி, வெளியிடவிரும்பாத கையெழுத்துப்பிரதிகளாகவே இருப்பவை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களில் கிடக்கின்றன. மௌனி, தருமூ சீவாராமு, சுந்தரராமசாமி, வெ.சாமிநாதன் எனக்கு எழுதிய கடிதங்கள், கருத்தரங்குகளில் படித்த கட்டுரைகள், என் நாட்குறிப்புகள், மொழிபெயர்ப்புக்கள், இன்னபிற ஏராளமாக இருக்கிருக்கின்றன. இவற்றையெல்லாம் தற்செயலாகப் பார்த்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் வெளியிடுவோமென்று வற்புறுத்திக்கொண்டேயிருந்தார். அவர் என்னை வெளியில் பார்க்கும்போதெல்லாம் செய்த தொந்தரவு பொறுக்கமுடியாமல், நான் தாஸ்த்தோவோஸ்கியின் "கர்மசோவ் சதோதரர்கள்" நாவலை தமிழாக்க்கம் செய்து வைத்திருந்த இரண்டாயிரம் பக்கங்களைக் கொடுத்தேன். படித்துவிட்டுட்டுத் திருப்பிக் கொடுங்கள் என்றுதான் கொடுத்தேன். "கர்மசோவ் சகோதரர்கள்" மொழிபெயர்ப்பைக் கொடுத்ததை மறந்துவிட்டேன். ஐந்தாண்டுகளுக்கு முன் கொடுத்திருந்தேன். என் வீட்டுக்கு அடிக்கடி வருவார் , பேசுவார். அன்றொருநாள் ஒரு பையை எடுத்துக்கொண்டு வந்தார். இதைப் பார்த்துவிட்டுக் கொடுங்கள் என்று பையில் இருந்து ஒரு பெரிய காகிதக் கட்டைக் கொடுத்தார். அப்படியே வாங்கி பக்கத்தில் வைத்துக்கொண்டேன். பேசத்தொடங்கினேன்.

"என்ன ஐயா அந்தக் காகித்தங்களைப் பிரித்துத்தான் பாருங்களேன்" என்றார்.

பிரித்துப் பார்த்தேன். கர்மசோவ் சகோதரர்கள் - 1200 பக்கங்களில் அச்சடிப்பதற்காக தட்டச்சு செய்திருக்கிறார். அதற்காக நிறையவே செலவு செய்துவிட்டிருக்கிறார். வெளியிடவேண்டாம் என்று சொல்லுவது எனக்கு நியாயமாகப் படவில்லை. இது மூன்றாணடுகளுக்கு முன்பே வரவேண்டியது. இது வெளிவர தாமதமாவதற்கு நான்தான் காரணம். நான் எழுதியவைகள் புத்தகமாக வெளிவருவதில் எனக்கு உற்சாகம் கிடையாது. என் புத்தங்களை விற்பனை செய்வது கடினம்.

அது விரைவில் வெளிவரும்.

சரி என்னதான் செய்வது என்னிடம் சேர்ந்து கிடக்கும் நான் எழுதியவைகளை?

காலஞ்சென்ற சாரதா மாலதி உட்பட நண்பர்கள் வற்புறுத்தியதால்தான் இந்த இணையதளத்தை தொடங்கியுள்ளேன்.

ஆக மஞ்சுவந்தத்தில் நான் எழுதியவைகள் மட்டுமே வெளிவரும். ஒரு தனிமனிதனின் ஒலிபெருக்கியாக மட்டுமே மஞ்சுவந்தம் இருக்கும். அவைகளை எந்தத் தலைப்புகளில் வெளியிடலாம் என்று சிந்தித்தபோது தோன்றியவைகள் பின்வருமாறு,

தலையங்கம், கட்டுரைகள், சிறுகதை, நாட்குறிப்பு, மொழி பெயர்ப்பு, எண்ணங்கள், அநுபவங்கள், பயணங்கள், கடிதங்கள், பேட்டிகள், உரையாடல்கள், மெய்யியல், நாவல்,வாழ்க்கை வரலாறு, மொழி பெயர்ப்பு நூல்கள், நிறைவேறாத ஆய்வுத் திட்டங்கள், கனவுகள், மேற்கோள்கள்.

மஞ்சுவந்தம் இந்தச் சொல்லின் பொருள்

இமய மலைக்கு உத்திரத் திசையில் உள்ள ஒரு மலை, இதில் மிகப்பெரிய தடாகம் ஒன்று உண்டு. அதில் பஞ்சவர்ணங்களோடு கூடிய தாமரை மலர்கள் மலர்வன.
- மதுரைத் தமிழ்ப் பேரகராதி இரண்டாம் பாகம் - பக்கம் 347

எனக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். எனக்குப் பணம் கிடைக்கும்போதெல்லாம் , ஓடோடிச் செல்லும் இடம் இமயமலைத் தொடர்தான். இந்தச் சிகரத்தை நான் காணுவதற்காக நன் பட்ட பாடுகளை பயணக்குறிப்புகளில் வெளியிடுவேன்.